Thursday, April 10, 2008

மஹா அவதார் பாபாஜியும், பரங்கிப்பேட்டை திருக்கோயிலும்-சுகுஜி-


பாபாஜி என்கின்ற பெயர் ரஜினிகாந்த் தயாரித்த பாபாஜி என்ற படத்திற்கு பிறகுதான் தமிழ்நாட்டில் பிரபலமடைந்தது. ஆனால் பல நூறு ஆண்டுகளாக இமயமலையை நாடிச் செல்லும் ஆன்மீக பசி கொண்ட பலருக்கு பாபாஜி என்ற பெயர் ஒரு மந்திரச் சொல்.
அவரது பெயர் பல நூற்றாண்டுகளாக மெய்ஞ்ஞானம் தேடிடும் ஞானியருள் அணையாத தாகமாக இருந்தது. அவரை இயேசு கிறிஸ்து சந்தித்ததாக கூறப்படுகிறது. ஆதி சங்கரருக்கு அவர் உபதேசித்துள்ளார்.
அவரது பெயர் சென்ற நூற்றாண்டிலிருந்து அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் ஆன்மீக சாதகர்களுக்கு மிகப் பரிச்சயமான பெயராகும்.
பாபாஜியைப் பற்றி மேலை நாட்டவருக்கு மிக விரிவாக, இந்தியாவைச் சேர்ந்த பல யோகியரையும் மேலும் பாபாஜியைப் பற்றியும் முதலில் கூறிய அங்கில நூல் "AUTO BIOGRAPHY OF A YOGI" ஆகும். இதை ஆங்கிலத்தில் எழுதியவர் பரமஹம்ச யோகானந்தா என்கின்ற மாபெரும் யோகியாவார். இந்த நூல் முதற்பதிப்பு 1946ல் வெளிவந்தது. 1893ம் ஆண்டு இந்தியாவில் கோரக்பூரில் இமயமலை அடிவாரத்தில் பிறந்து 1952ல் அவர் முக்தியடைந்தார். அவர் மிகப்பெரிய யோகக்கலை நிறுவனங்களை அமெரிக்காவில் நிறுவி, தனது வாழ்வின் பெரும் பகுதியை மேலை நாட்டினருக்கு நமது பண்டைய பெருமையான யோகக் கலையையும் வாழ்வின் நோக்கத்தையும், வாழ்க்கை முறையையும் போதித்து வந்தார். அவரது தன்னையறியும் அறிவு இன்னமும் யோகானந்தா சத்சங் சொசைட்டி ஆப் இந்தியா என்ற அமைப்பின் மூலம் பாபாஜி வழிவந்த கிரிய யோகத்தையும், யோகத்தின் பெருமையையும் உண்மையை தேடுவோருக்காக மிகச் சிறப்புடன் போதித்து வருகின்றன.

பரமஹம்ச யோகானந்தா எழுதிய 'ஒரு யோகியின் சுயசரிதை' என்ற ஆங்கில நூல் ரஜினியின் பாபாஜி பட வெளியீட்டுக்குப் பிறகு, தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. இதன் மூல ஆங்கில நூல் இப்போதும் உலகில் உள்ள 1000க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒரு பாடநூலுடன் ஆன துணை நூலாக விளங்கி வருகிறது.
பரமஹம்ச யோகானந்தாவின் வாழ்வு அவரது போதனைக்கு ஒப்ப, யோக நெறியில் விளங்கியது என்பதற்கு அவரது மரணமும் ஒரு சான்றாக அமைந்தது.
பரமஹம்ச யோகானந்தா 1952ம் வருடம் மார்ச் 7ம் தேதி மகா சமாதி அடைந்தார். அவரது கடைசி பிரசங்கம் அப்போதைய இந்திய தூதரக அமெரிக்காவில் இருந்து திரு. சென் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. அன்று இரவு அந்த வீட்டிலேயே பரமஹம்ச யோகானந்தர் மகா சமாதியடைந்தார். அவரது உடல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சவக்கிடங்கில், இந்தியாவில் இருந்து அவரது சீடர்கள் வரும் வரை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அனைவரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் உயிர் பிரிந்த பின்பும் அவரது உடலில் எந்தவித மாற்றமும் 20 நாட்கள் க.ழித்தும் ஏற்படவில்லை. உடலில் எந்த துர்நாற்றமோ அல்லது தோலில் சுருக்கமோ சிதைவோ அவரது உடலில் 20 நாட்கள் கழித்தும் கூட ஏற்படவில்லை. இது மிக அதிசய செய்தியாக அப்போது அமெரிக்க, ஐரோப்பாவில் இருந்த மிகப் பிரபலமான அனைத்து பத்திரிக்கைகளிலும் செய்தியாக வந்தது. இந்து யோகத்தின் உயர்வைப் பற்றியும் மிக விரிவாக செய்திகள் வெளியிட்டன.
அப்போதே சவக்கிடங்கின் இயக்குநர் ஆக இருந்த ஹாரி.டி.ரோ என்பவர் மிக விரிவாக ஒரு அத்தாட்சியிடப்பட்ட ஒரு சான்றிதழைக் கொடுத்துள்ளார். அதில் அவர் தான் இதுவரை இத்தகு அதிசயத்தைப் பார்த்ததில்லை எனவும், தனது சவக்கிடங்கில் மார்ச் 7ம் தேதி வைக்கப்பட்ட சடலம், மார்ச் மாதம் 27ம் தேதி பார்த்தபோது அப்போதுதான் வைத்தது போல் மிகப் புதியதாகவும் எந்தவித துர்நாற்றமோ அல்லது சிதைவோ இல்லாமல் வைக்கப்பட்டதை விட புதியதாக தோற்றமளிப்பதாகவும் இதைப் போல் இதுவரை அதிசயத்தை தான் பார்த்ததில்லை என ஒரு சான்றிதழ் செய்து அனுப்பியுள்ளார்.
இத்தகு மகா அவதார் பாபாஜியை தனது குரு நேரில் சந்தித்ததாக தனது புத்தகத்தில் யோகானந்தா கூறியுள்ளார். 1861-1935ம் ஆண்டுகளுக்கு இடையே ஹரி மகாசாயா என்ற சாது பாபாஜியை பலமுறை சந்தித்து பேசும் ஆனந்த அனுபவம் பெற்றதாக கூறியுள்ளார். லஹரி மஹாசாயாவின் பல சீடர்களும் பின்பு பாபாஜியை காணும் பாக்கியம் பெற்றதாக கூறியுள்ளனர். ஆனால் லஹரி மஹாசாயின் நேரடி சீடர் ஸ்ரீயுக்தேஸ்வர் கரி 1894ம் ஆண்டு பாபாஜியை சந்தித்ததைப் பற்றி தனியே ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளார். மேலும் பல சீடர்கள் 1935ம் ஆண்டு பாபாஜியை நேரில் பார்த்து பேசியதாக குறிப்பிட்டுள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள் சுவாமி கேசுபானந்தா, ராம் கோபால் மணிம்தார்.
ஆனால் ஸ்ரீயுக்தேஸ்வரரின் நேரடி சீடரான பரமஹம்ச யோகானந்தா தான் தனது உலகப் புகழ்பெற்ற நூலான யோகியின் சரித்திரத்தை ஆங்கிலத்தில் எழுதி பாபாஜியை உலகமங்கும் உள்ள ஆன்மீக பற்று கொண்டோருக்கு அறிமுகப்படுத்தியவர் ஆவார்.

பிறகு தமிழ்நாட்டில் உள்ள செட்டிநாட்டு பகுதியில் உள்ள கானாடு காத்தானில் உயரிய செல்வ நிலையில் இருந்த S.A.A.ராமய்யா என்பவர் 1952 அக்டோபர் மாதம் 17ம் தேதி தீபாவளி அன்று பாபாஜியின் கட்டளைப்படி சென்னையில் கிரிய பாபாஜி சங்கம் என்ற அமைப்பை நிறுவி கிரியா யோகம் கற்பிக்க ஆரம்பித்தார். அதே ஆண்டு வடக்கே கொல்கத்தாவைச் சேர்ந்த U.T.நீலகண்டன் என்பவருக்கும் இதே போல் ஒரு புனித அனுபவம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் அதுவரை பாபாஜியை மகா அவதார் என்றும், சுமார் இரண்டாயிரம் ஆண்டுக்கு மேல் அவர் கிரிய யோகம் பயிற்று வருகிறார் என்றும், அவர் எங்கு பிறந்தார் என்பது தெரியாது, அவர் வரலாறு தெரியாது எனக் கூறப்பட்டதற்கு திடீரென ஒரு மாற்றம் யோகி ராமைய்யாவின் சீடர் கனடாவை சேர்ந்த மார்ஷல் கோவிந்தன் மூலம் வந்தது.
மார்ஷல் கோவிந்தன் வெளியிட்ட ஆங்கிலப்புத்தகமான "18 சித்தர்கள் மற்றும் கிரிய யோக வழி முறை" என்ற ஆங்கிலப் புத்தகத்தில் மகா அவதார் பாபாஜி 20 நவம்பர் 203ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரம் அருகில் உள்ள பரங்கிப்பேட்டையில் பிறந்ததாகவும், அவரது இயற்பெயர் நாகராஜ் என்பதாகவும், நாகராஜ் தனது இளம் வயதிலேயே கடத்தப்பட்டு இமயமலை கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்பு பல ஆண்டு ஆன்மீக தேடுதலுக்கு பின் அவர் மகா அவதார் நிலை அடைந்தார் எனவும், இதை அவரது குரு யோகி ராமய்யாவிடம் பாபாஜி கூறியதாக எழுதி பரபரப்பை உண்டாக்கினார். அந்த புத்தகமும் உலகெங்கிலும் பரபரப்பாக லட்சக் கணக்கில் விற்றது.

பின்பு யோகி ராமய்யா அவரது சொந்த செலவில், பரங்கிப்பேட்டையில் பாபாஜி பிறந்த இடத்தை மகா அவதார் பாபாஜியின் அருளால் உணர்ந்து , அந்த இடத்தை மத்திய அரசு கஸ்டம்ஸ் துறையின் கட்டுப்பாட்டில் இருந்ததை மத்திய அரசு அனுமதி பெற்று வாங்கி அங்கே ஒரு சிறிய கோயில் அமைத்துள்ளார்.

இதைக்காண உலகெங்கும் உள்ள பாபாஜியின் சித்தாந்தத்தின் அன்பர்கள் வந்து பார்த்த வண்ணம் இருக்கின்றனர். அந்த கோயிலின் புகைப்படங்களும் அதை நிறுவிய யோகி ராமைய்யாவின் படமும் இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ளது.
TEMPLE



BABAJI

(BIRTH PLACE)
ஆனால் தற்போது மார்ஷல் கோவிந்தனும் தனது குருவின் மார்க்கத்தில் இருந்து தனியே ஒரு ஆஸ்ரமத்தை நிறுவி அதற்கு கிளைகளை உலகெங்கும் நிறுவி பாபாஜியின் கிரிய யோகம் என்ற ஞானத்தைப் பரப்பி வருகிறார். இந்தியாவில் பெங்களூரில் அதன் கிளை அமைந்துள்ளது.
ஆனால் சமீப காலமாக அவர் பரமஹம்ச யோகானந்தாவைப்பற்றி சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதால் அவருக்கும் உலகெங்கும் உள்ள பாபாஜியின் உண்மையாக வழிநடப்பவர்களுக்கும் இடையே சில முரண்பாடுகள் தோன்றியுள்ளன.
பரமஹம்ச யோகி குறிப்பிட்ட மகா அவதார் பாபாஜியும், யோகி ராமைய்யாவால் கோயில் அமைக்கப்பட்டுள்ள பாபாஜியும் வேறு வேறானவர்கள் என்ற ஒரு சர்ச்சை உலகெங்கிலும் தோன்றியுள்ளது.
தற்போது இரு ஆண்டுகளுக்கு முன் பாபாஜியை நேரில் கண்டதாக கூறிக் கொண்ட, பாபாஜியின் கோயிலைக் கட்டிய யோகி ராமைய்யாவும், தனது பயணத்தின்போது மலேசியாவில் முக்தியடைந்தார். தற்போது பாபாஜியின் கிரிய யோகத்தைப் பற்றி வகுப்புகள் எடுக்க உலகெங்கும் பல்வேறு அமைப்புகள் தனித்தனியே செயல்பட்டு வருகின்றன. அதனால் நாம் இப்போது காணும் கோயில், யோகி ராமய்யாவால் கட்டப்பட்டு அவரது சீடர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற பரங்கிப்பேட்டை கோயில், உண்மையான மஹா அவதார் பாபாஜியின் பிறந்த இடம் என்பதை உறுதியாக கூற இயலவில்லை.
என்ன இருந்தாலும் அந்த இடம் ஒரு தெய்வீக சான்றியத்துடனும், ஆன்மீக அதிர்வுகளை எழுப்பும் இடமாகவே விளங்குகிறது. அதனால் வாய்ப்பு கிடைப்போர் சென்று ஆன்மீக அனுபவங்களைப் பெற்று வரலாம்.

அந்தக் கோயில் கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில், பரங்கிப்பேட்டை என்ற ஊரில் உள்ள கஸ்டம்ஸ் அலுவலகத்தின் அருகில் அமைந்துள்ளது.
பரங்கிப்பேட்டையில் இருந்து புவனகிரியில் சுவாமி ராகவேந்திரா பிறந்த இடமும், அதன் நேரே வள்ளல் ராமலிங்க அடிகள் பிறந்த ஊரான மருதூரும் அமைந்துள்ளதை காணும்போது அந்தப்பகுதியே ஒரு ஆன்மீக குருக்களின் பீடபூமி போல் தோன்றுகிறது.
நம்பிக்கை தானே மனிதனின் வாழ்க்கைக்கு உயிர்நாடி, அந்த நம்பிக்கையுடன் பரங்கிப்பேட்டை, புவனகிரி, மருதூர் மூன்றையும் கண்டு ஆன்மீக பயன் பெற்று வரலாமே!


















1 comment:

Raji said...

mathirppukuriya iyya, thangalin intha katturaiyai veguvaaga rasithu padithen. Nanri.